காலமும் கோலமும் மாறலாம். ஆனால், என்றென்றும் மாறாது தாயின் பேரன்பு. அச்சிறப்புமிக்க தாய்மையை, அதன் மாண்பைக் கொண்டாடும் நாளே அன்னையர் தினம்! குடும்பத்திற்காக அயராது, துவளாது, உறுதியோடு உழைத்துவரும் அன்னையர் நால்வரின் வாழ்க்கைப் போராட்டங்களையும் அவர்களின் எதிர்நீச்சல் பயணங்களையும் அறிந்துவந்தது தமிழ் முரசு.
அர்ப்பணிப்பின் மறுவடிவாகத் திகழும் அன்னை
மோனலிசா
மதுப் பழக்கம், பல பெண்களுடன் தகாத உறவு, பொறுப்பற்ற நடத்தை, குடும்ப வன்முறை - இப்படித் தமக்குப் பல கொடுமைகளை இழைத்த கணவர் செல்வம் மரணப்படுக்கையில் இருந்தபடி மன்னிப்பு கேட்டுக் கதறி அழுதபோது சிறு புன்னகையையும் ஊடுருவும் பார்வையையும் பதிலாக அளித்தார் திருவாட்டி யசோதா லட்சுமணப்பிள்ளை, 55.
எவ்விதத் துணையும் ஆதரவும் இல்லாமல் நான்கு பிள்ளைகளை வளர்த்து பட்டப்படிப்பு வரை படிக்கவைத்து ஆளாக்கி இருக்கிறார் அர்ப்பணிப்பின் மறு வடிவாகத் திகழும் இவ்வன்னை.
குடும்பச் சூழலால் தொடக்கப்பள்ளியோடு படிப்பைக் கைவிட்ட இவர், வாழ்வில் கற்றதெல்லாம் அனுபவப் பாடங்களே.
இளவயதிலேயே திருமணம், இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் என அடுத்தடுத்து நான்கு பிள்ளைகள். இருந்தும் ஒற்றை ஆளாகக் குடும்பத்தைச் சுமந்தார் திருவாட்டி யசோதா.
குடும்பத்தைப் பற்றிய எண்ணமே இல்லாத கணவரிடம் இருந்து வருமானத்தை எதிர்பார்க்க முடியாது என்பதால் சுகாதாரப் பணியாளராக வேலை செய்தார் திருவாட்டி யசோதா. மொத்த குடும்பமும் அவர் ஈட்டிய $850 மாத வருமானத்தை நம்பியே இருந்தது. கூடுதல் வருமானத்திற்காக வார இறுதிகளிலும் பம்பரமாய்ச் சுழன்று வேலை பார்த்தார் இப்பெண்மணி.
இருப்பதற்குச் சொந்த வீடாவது உள்ளதே என எத்தனையோ இரவுகள் தாம் நிம்மதியாக உறங்கியபோதும் அதற்கும் ஒருநாள் கணவர் உருவத்தில் பிரச்சினை வந்தது.
மதுபோதையில் இருந்த கணவர், அடுப்பை அணைக்காமல் உறங்கிவிட்டார். சில மணி நேரத்தில் வீடே தீக்கிரையானது.
"தகவல் கிடைத்து நாங்கள் அனைவரும் சென்று வீட்டைப் பார்த்தபோது அந்தப் புகைமூட்டத்தில் அப்பா எப்படி உயிர்பிழைத்தார் என்றே எங்களுக்குத் தோன்றியது," என்று கூறினார் யசோதாவின் மூத்த மகள் லலிதா தேவி செல்வம், 32.
தற்போது சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நிர்வாகியாகப் பணிபுரிந்துவரும் லலிதா, "அன்று நாங்கள் அனைவரும் வீட்டைப் பார்த்துக் கதறி அழுதுகொண்டு இருந்தபோது எவ்வித உணர்ச்சியுமின்றி ஆழ்ந்த சிந்தனையில் உறைந்து போயிருந்தார் என் அம்மா. இத்துணைத் துயர்களுக்கு இடையிலும் அவர் அழுது நாங்கள் பார்த்த தருணங்கள் மிகச் சிலவே," என்று கூறி, தன் தாயைப் பெருமிதத்துடன் கட்டித்தழுவிக்கொண்டார்.
"வீடு போய்விட்டது, அடுத்து பிள்ளைகளை எங்குத் தங்க வைக்கலாம் என்பதே என் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கோ என் வாழ்விற்கோ எத்தகைய சிரமங்கள் வந்தாலும் கவலை இல்லை. என் எண்ணம், என் லட்சியம், என் வாழ்க்கை எல்லாமே என் பிள்ளைகளின் தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும் என்பது மட்டுமே," என்று மலர்ந்த முகத்துடன் கூறினார் திருவாட்டி யசோதா.
வீடில்லாச் சூழலில் உறவினர்கள் வீட்டில் சில வாரங்கள் அடைக்கலம் புகுந்தனர்; சமூக அமைப்புகளின் உதவியைப் பெற்றனர். நாளடைவில் வாடகை வீட்டில் குடியேறவும் முடிந்தது. இன்று மூத்த மகளுடன் தங்களுக்கென ஒரு வீடு வாங்கி அதில் குடியேறிவிட்டனர் இந்தக் குடும்பத்தார்.
சட்டப்படி கணவரைப் பிரிந்து பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்தபோது உடல்நலம் குன்றிய நிலையில், அவர் தனிமையில் வாடுவது திருவாட்டி யசோதாவிற்குத் தெரியவந்தது. மதுப்பழக்கத்தால் நீரிழிவு முற்றிய நிலையில் திரு செல்வத்தின் கால் துண்டிக்கப்பட்டுவிட்டது. தம்மைத் தாமே பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் தவறுகளை உணர்ந்து மனம் திருந்தினார் திரு செல்வம்
அவர் ஒரு நல்ல கணவராக, தந்தையாக, மனிதராக வாழாமல் போனாலும் நல்ல குடும்ப உறுப்பினர்களாக நாம் நம் கடமையைச் செய்ய வேண்டும் என்று பிள்ளைகளிடம் கேட்டுக்கொண்டார் இந்தத் தாய்.
மூத்த பிள்ளை சென்று அவ்வப்போது தந்தையைக் கவனித்து வந்த சூழலில், தாமும் பல நாள்கள் மனமுவந்து சமைத்துக் கொடுத்தார் திருவாட்டி யசோதா. இவ்வாண்டு பிப்ரவரியில் திரு செல்வம் உயிரிழக்க, எல்லாச் சடங்குகளையும் செய்து அவருக்கு இறுதிவிடை கொடுத்தது இந்தக் குடும்பம்.
"வாழ்வது ஒருமுறை. அதில் நம் பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவரச் செய்து குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் வாழ்ந்தாலே போதும். நிம்மதியும் மகிழ்ச்சியும் எச்சூழலிலும் நம்மைவிட்டு அகலாது," என்று தம் வாழ்க்கைப் பாடத்தைப் பகிர்ந்துகொண்டார் இந்த முன்மாதிரி அன்னை.
வாழ்க்கை, நம்பிக்கை, உலகம், உறுதுணை என எல்லாமே பிள்ளைகள்தான்!
ஆ. விஷ்ணு வர்தினி
ஒரு தாயாகத் தாம் தோல்வி அடைந்துவிட்டதாக திருவாட்டி கோமதி (உண்மைப் பெயரல்ல) பலமுறை நினைத்ததுண்டு. இன்றும் அவ்வெண்ணம் அவரை நாளும் வாட்டி வருகிறது.
மனத்தெளிவின்றிச் செய்த குற்றத்திற்காக ஐந்தாண்டுகள் சிறை சென்றிருந்த அவர், தமது மூன்று இளம்பிள்ளைகளிடம் இருந்து பிரிந்து, 2020ல்தான் அவர்களுடன் மீண்டும் இணைந்தார்.
தற்போது இவர்கள் ஒரு குடும்பமாகப் புதுவாழ்வு தொடங்க முயன்று வருகின்றனர். பள்ளி, நண்பர்கள் பற்றி வெளிப்படையாகப் பேசுவது, சேர்ந்து சிரிப்பது, வெளியில் செல்வது, எனப் பிள்ளைகளுடன் இனிதே கழிகின்றன 49 வயது திருவாட்டி கோமதியின் நாள்கள்.
தமது இரு பதின்ம வயது மகன்களுக்கும் தாம் சிறையில் கற்ற வாழ்க்கைப் பாடங்களை திருவாட்டி கோமதி எடுத்துரைக்கிறார்; எப்போதும் தொடக்கப்பள்ளி மாணவியான மகள் கூடவே இருக்கிறார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னரோ, அவரின் நிலை முற்றிலும் வேறாக இருந்தது.
பலமுறை போதைப்பொருள் விற்பனைக்காகவும் பழக்கத்துக்காகவும் கணவர் சிறைக்குச் சென்றுவந்த காரணத்தால் திருவாட்டி கோமதிக்குக் கணவரின் ஆதரவு என்பது சொற்பமாகவே கிடைத்தது. முதல் மகன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே கணவர் பிடிபட்டார். அதே சூழல் இரண்டாவது மகன் பிறந்தபோதும் ஏற்பட்டது. இந்தப் போக்கு, திருவாட்டி கோமதியைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கியது.
பொட்டலம் கட்டும் வேலை செய்தபடி, வாடகை வீட்டில் இருந்துகொண்டு குடும்பத்தைக் கரையேற்ற அரும்பாடுபட்டார் திருவாட்டி கோமதி. அதே சமயம், போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்த கணவரை நல்வழிப்படுத்த முடியாமலும் தவித்தார்.
கணவர் 2012ல் சிறை சென்றபோது, அவரை விடுவிக்கும் முனைப்பில் வீட்டில் எஞ்சியிருந்த போதைப்பொருளை விற்க நினைத்தார் திருவாட்டி கோமதி. "அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வழக்கறிஞர் ஒருவரை நாடலாம் என்று நினைத்தேன்," என்றார் அவர்.
ஆனால், அதிகாரிகளிடம் பிடிபட்டார் திருவாட்டி கோமதி. இதனால் இளம் பிள்ளைகள் மூவரையும் குடும்பத்தாரின் பராமரிப்பில் விட்டுச்செல்ல நேரிட்டது. எக்காரணத்தை முன்னிட்டும் பிள்ளைகள் சிறையில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், மூன்றாண்டுகளாக அவர்களைப் பார்க்காமல் இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அம்மாவைத் தேடிய பிள்ளைகளிடம், அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் குடும்பத்தார் கூறி இருந்தனர்.
"அவர்களை நினைக்காத நாளில்லை. மீண்டும் சந்திக்கும்போது அவர்களிடம் என்ன சொல்வது? நாளும் கையிலேயே வைத்து நான் பார்த்துக்கொண்ட என் குழந்தைகள் என்னை மீண்டும் ஏற்றுக்கொள்வார்களா? இப்படியெல்லாம் ஒரே பயமாக இருந்தது," என்றார் திருவாட்டி கோமதி.
இருப்பினும், புதுவாழ்வு தொடங்கி பிள்ளைகளின் நம்பிக்கையைப் பெறும் உறுதி அவருக்குள் பிறந்தது. மேற்படிப்பு பயிலாத அவர், சிறையிலேயே வழக்கநிலைத் தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற்றார்.
தற்போது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஊட்டச்சத்து, உணவு சார்ந்த பகுதிநேர பட்டயக்கல்வியில் அவரின் கனவுப்பயணம் தொடர்கிறது. அடுத்தாண்டுப் பட்டயம் பெற்றபிறகு, சொந்தத் தொழில் தொடங்குவது அவரின் இலக்கு.
சிறைக்காலத்திலிருந்தே 'நியூ லைஃப் ஸ்டோரீஸ்' எனும் லாப நோக்கமற்ற அமைப்பின் தொடர் உதவி கிடைத்ததாகக் குறிப்பிட்ட அவர், "அவர்களின் பயிலரங்குகளும் பேச்சுகளுமே முறிந்த குடும்பத் தொடர்புகளை மீண்டும் வலுப்படுத்த முடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியது," என்றார்.
நரம்பு சார்ந்த பிரச்சினைகளால் வேலைக்குச் செல்ல முடியாமல் இருக்கும் திருவாட்டி கோமதி, பிள்ளைகளே தமக்கு நம்பிக்கை ஊட்டி இயக்குவதாக கூறிப் புன்னகைத்தார்.
எக்குறையுமின்றி வளர்க்க உறுதிபூண்டுள்ள தாய்
கி. ஜனார்த்தனன்
பிறக்கவுள்ள தம் செல்லக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி மகிழலாம் என நினைத்த சமூக ஊழியர் திருவாட்டி ஜீவிதா லிங்கேஸ்பரன், 25 வாரங்களிலேயே பிறந்துவிட்ட ஆண் குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தாம் அணிந்திருந்த மோதிரம், குழந்தையின் காலுக்குக் கொலுசாகப் போடும் அளவிற்கு அதன் கால் அவ்வளவு சிறியதாக இருந்ததை நினைவுகூர்ந்தபோது 34 வயதான திருவாட்டி ஜீவிதாவின் நா தழுதழுத்தது.
இவரின் மகனான கிருஷ்ணா பிறந்ததும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். தாய் தன் குழந்தையைத் தொடுவதற்கே இரண்டு வாரங்களாயின.
"கிருஷ்ணாவை முதன்முதலில் பார்த்தபோது அவன் உடலிலும் மூக்கிலும் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதனைக் கண்டதும் இடிந்துபோனேன். இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் அவனுக்குப் பால் கொடுக்க முடிந்தது. அதுவரைகுழாய் வழியாகத்தான் பால் குடித்தான். முதல்முறையாகப் பால் குடித்தபோது சரியாகக் குடிக்கத் தெரியாமல் பால் நுரையீரலுக்குள் சென்றதால் மேலும் சிக்கலானது," என்றார் திருவாட்டி ஜீவிதா.
நான்கு மாதங்களுக்குப் பிறகே கிருஷ்ணாவால் வீட்டுக்குச் செல்ல முடிந்தது. அதுவரைஒவ்வொரு நாளும் தாயார் ஜீவிதா மருத்துவமனைக்குச் சென்று தம் ஆசைகளையும் கனவுகளையும் குழந்தையின் காதில் ஓதிவந்தார்.
ஒரு தாயின் வலிமை அவரது உண்மைஅன்பில்தான் உள்ளது என்பதைத் தாயானபின் தாம் உணர்ந்ததாக இவர் கூறினார்.
"பிள்ளைக்கு அழுத்தம் தந்து அவனைக் கல்விமானாகவும் வெற்றியாளனாகவும் வளர்க்க வேண்டும் என முதலில் எண்ணினேன். கிருஷ்ணா பிறந்த பிறகு அச்சிந்தனை முற்றிலும் மாறிவிட்டது," என்றார் இவர்.
கடுமையாகப் பேசிவிட்டால் மகனிடம் மன்னிப்பு கேட்க திருவாட்டி ஜீவிதா தயங்குவது இல்லை. எல்லா நேரங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது கடினம் என்பதால் தந்தையின் பங்கு முக்கியம் என்றும் இவர் சொன்னார்.
"எனக்கு ஓய்வு தேவைப்படும்போது என் பிள்ளையை அவர் அன்புடன் கவனித்துக்கொள்வார்," என்று திருவாட்டி ஜீவிதா கூறினார்.
தற்போது எட்டு வயதாகி துடிப்புடன் இருக்கும் மகனின் அணைப்பும் அன்பு முத்தங்களுமே இந்தத் தாய்க்கு அன்னையர் தினப் பரிசு.
பிள்ளைகளின் மகிழ்ச்சியே பெற்றோர்க்கு இன்பம்
இளவயதிலிருந்தே பெண் பிள்ளைகள்மேல் மிகுந்த பிரியம் கொண்ட திருவாட்டி நங்கை சுப்பிரமணியன், மூன்று பெண் பிள்ளைகளுக்குப்பின் எதிர்பாராமல் மீண்டும் கருவுற்றார். நான்கு பிள்ளைகளை வளர்ப்பது கடினம் என நினைத்த பெற்றோர் கருவைக் கலைக்க எண்ணினர். ஆனால், கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகள் எனத் தெரியவந்தது.
இறைவன் அருளிய உயிர்களை அழிக்கும் உரிமை தமக்கு இல்லை என்ற முடிவுடன் அந்த இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்த இந்தத் தாய்க்கு அடுத்தடுத்து வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சோதனை காத்திருந்தது.
குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டையருள் பெண் குழந்தை உடல்நலத்துடன் இருந்தது. ஆனால், ஆண் பிள்ளை பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது ஒன்றரை வயதில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதுவரை கணவருடன் சேர்ந்து நடத்திவந்த உணவகத்தைக் கவனிக்க முடியாமல், பள்ளிப் பேருந்து ஓட்டுநராக கணவரும் இல்லத்தரசியாக நங்கையும் பொறுப்பேற்றனர்.
கடும் பொருளியல் நெருக்கடிக்கு இடையே 12 வயது, 5 வயது, 3 வயது, 2 வயதில் இருவர் என ஐந்து பிள்ளைகளுடன் குடும்பத்தை நடத்துவது ஒவ்வொரு நாளும் போர்க்களம் போல் இருந்தது என்று நினைவுகூர்ந்தார் திருவாட்டி நங்கை, 51.
"அன்றாட வாழ்க்கை பல வழிகளிலும் சவாலாகத்தான் இருந்தது. பிள்ளைகள் தொடக்கப்பள்ளியில் பயின்றபோது சக்கரநாற்காலியுடன் பேருந்தில் ஏறும் வசதி இல்லை. அதனால், பல நாள்கள் வீட்டில் இருந்து நடந்தே எல்லாப் பிள்ளைகளையும் அழைத்துச் செல்வேன். எத்தனையோ நாள்கள் கனமழையிலும் சக்கர நாற்காலியில் துர்கேஸ்வரனைத் தள்ளிக்கொண்டும் மற்றப் பிள்ளைகளுக்கு மழையங்கி அணிவித்தும் பள்ளி சென்றுள்ளோம்," என்று கூறும்போதே இந்தத் தாயின் விழியோரங்களில் நீர்த்துளி எட்டிப் பார்த்தது.
அவர்கள் பள்ளிக்கு வரும் காட்சியை ஒருமுறை நேரில் கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர் பள்ளிப் பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்துகொடுத்தார். துர்கேஸ் படித்து முடிக்கும்வரை அவருடைய அனைத்து வகுப்புகளும் முதல் மாடியில் இருந்தன. இதுபோல் பள்ளி, சமூக அமைப்புகள், அரசாங்கம் எனப் பலருடைய முயற்சியும் உதவியும் உறுதுணையாய் இருந்தது.
தன் மகன் அவனையே நம்பி வாழ்வதற்குத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்துகொடுப்பேன் என்று உறுதியுடன் கூறுகிறார் திருவாட்டி நங்கை.
கல்வியில் சிறந்து விளங்கும் துர்கேஸ், தற்போது 17 வயதில் உயர்நிலை நான்கில் பயின்றுவருகிறார். எதிர்காலத்தில் வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் துர்கேஸ், தமிழ்த்துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்பதே தாயின் கனவு.
துர்கேசின் சகோதரிகளுக்குப் பிற்காலத்தில் சொந்தமாகக் குடும்பங்கள் ஏற்பட்டுவிடும். தம் மறைவிற்குப் பின்னர் துர்கேஸ் தனிமையில் இருப்பாரோ என்ற கவலை தமக்கு இருந்தாலும் அவனது கல்வி அவனுக்குத் துணை நிற்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் இந்த உன்னதத் தாய்.
செய்தி: மோனலிசா

