தேங்க் ரோடு அருள்மிகு தெண்டயுதபாணி கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழா வரும் வியாழக்கிழமை (ஜூன் 1) நடைபெற உள்ளது. 2014ஆம் ஆண்டு தேசிய மரபுடைமைச் சின்னமாக இக்கோயில் அறிவிக்கப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் குடமுழுக்கு இது. மேலும், இக்கோயிலின் எட்டாவது குடமுழுக்கு இது.
பழனி, திருச்செந்தூர் முதலிய அறுபடை வீடுகளிலிருந்தும் திருநள்ளாறு, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட ஊர்களிலிருந்தும் 46 புரோகிதர்களும் சிங்கப்பூரிலிருந்து 10 புரோகிதர்களும் திருக்குட நன்னீராட்டு விழாவில் கலந்துகொள்கின்றனர்.
‘சிவஸ்ரீ அண்ணா’ என பிரபலமாக அழைக்கப்படும் பிச்சை குருக்கள் இந்தக் குடமுழுக்கு விழாவின் ‘சர்வசாதகம்’ எனப்படும் தலைமைப் பொறுப்பில் செயல்படுவார்.
பத்து காலங்களில் நடைபெறும் இக்குடமுழுக்கின் முதற்கட்ட பூசைகளாக மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்கந்த ஹோமம் முதலியவை மே 23, 24 தேதிகளில் நடைபெற்றன. பத்து கால யாகசாலை பூசைக்கு முன்பு 48 நாள்களுக்கு யந்திர பூசைகள் நடைபெற்றன. மே 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சந்நிதிகளிலுள்ள திருவுருவங்களுக்கு எண்ணெய் சாற்றும் நிகழ்வுக்கு பக்தர்கள் அழைக்கப்படுகின்றனர்.
திருக்குட நன்னீராட்டு விழாவிற்கு பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருடன் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், கலாசார, சமூக இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா ஆகியோரும் வருகைபுரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னிரண்டு மங்கல வாத்தியக்கலைஞர்களும் புகழ்பெற்ற செவ்விசைப் பாடகர் சீர்காழி சிவசிதம்பரமும் இணைந்து இறை தரிசனத்திற்காகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இசைமழை பொழியவுள்ளனர்.
கோயிலின் உள்புறத்திற்குள் முருகப்பெருமானின் அறுபடைவீட்டு சிற்பங்கள், சிவபெருமானின் நவதாண்டவச் சிற்பங்கள் ஆகியவை தூண்களிலும் சுவர்களிலும் இடம்பெறுகின்றன. இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 15 சிற்பிகள் கடந்த ஓராண் டாக இச்சிற்பங்கள் அனைத்தையும் பழுதுபார்த்து வண்ணம் பூசி புதுப்பொலிவைச் சேர்த்துள்ளனர். தமிழகத்தின் சோழர்கால சிற்பக்கலை பின்பற்றப்படுவதாகத் தலைமை சிற்பி நாகராஜன் ஸ்தபதி, 72, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.