சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த நகரத்தார் சமூகத்தினரால் தெண்டாயுதபாணி திருக்கோயில் 1859ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
அதற்கு முன்னர் சென்ட்ரல் பார்க் என அழைக்கப்படும் இடத்தில் அச்சமூகத்தினர் புனித வேல் ஒன்றை நட்டு வைத்து வழிபட்டு வந்தனர்.
அரசருக்கு நிகரான செல்வத்தைச் சேர்த்தாலும் ஆண்டியைப் போல் மனதளவில் எளிமையுடன் வாழும் பண்பைப் போற்றவே தெண்டாயுதபாணி எனும் ஆண்டி கோலத்தில் முருகன் இங்கு அருள்பாலிக்கிறார்.
முதலில் கட்டப்பட்ட கோயில், நகரத்தார் சமூகத்தின் வீடுபோன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது. அதன் நுழைவாயிலில் இரண்டு திண்ணைகள் இருந்தன.
இக்கோயில் நகரத்தார் சமூகத்தினரின் மையப்புள்ளியாகத் திகழ்ந்தது. 1928ஆம் ஆண்டு இந்தக் கோயிலின் வளாகத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார் வர்த்தக தொழிற்சபை அமைக்கப்பட்டது.
1970கள் வரை சிறிதாக இருந்த கோயிலுக்கு 75 அடி ராஜகோபுரம் கட்டப்பட்டது. கோயிலின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் கடவுள் திருவுருவச் சிற்பங்களும் 48 அலங்காரக் கண்ணாடி சன்னல்களும் அமைக்கப்பட்டன.
பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படும் ‘கார்த்திகைக் கட்டு’ என்ற பகுதி, பிற்காலத்தில் சமையலுக்கான இடமாக மாற்றப்பட்டது.
புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலின் வழிபாட்டு மரபை அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் பின்பற்றுகிறது. திருவுருவங்களுக்கு சிவாச்சாரியார்களும் தெண்டாயுதபாணியின் வேலுக்கு சைவ சமயத்தைச் சார்ந்த பண்டாரமும் பூசை செய்வது வழக்கம்.
பண்டாரங்களைப் பயன்படுத்தும் வழக்கம் இங்கு தொன்றுதொட்டு உள்ளது. ஆண்டுதோறும் ஆறு முக்கிய திருவிழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. தைப்பூசம், மீனாட்சி லட்சார்ச்சனை, இராமாயணம் வாசித்தல், நவராத்திரி, கந்த சஷ்டி விரதம், திருக்கார்த்திகை ஆகியன அவை.
சிங்கப்பூர் தெண்டாயுதபாணி முருகனைப் பற்றி கவிஞர்கள் பலர் பாடல் இயற்றியுள்ளனர்.
1887ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சதாசிவ பண்டிதர் என்பவர் இயற்றி வெளியிட்ட சிங்கை நகரந்தாதி, சித்திரக்கவிகள் எனும் நூல்கள் அவற்றுள் பழமையானவை. மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி நூல்கள் அவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1907ஆம் ஆண்டு சிங்கைநகர் சிங்கார வடிவேலர் காவடிச் சிந்து என்ற பாடல் ஆர்.எம்.ஆர். ராமநாதனால் எழுதப்பட்டது.
இப்படி வரலாற்றின் கையைப் பிடித்து வளர்ந்த தெண்டாயுதபாணி கோயில், எட்டாவது குடமுழுக்கை எட்டிப் பிடித்திருப்பது பெரும் சிறப்பாகும்.