முழுநேர ஊழியர்கள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணியாற்றும்போது மருத்துவச் சலுகைகள், மருத்துவ விடுப்பு, சம்பள உயர்வு, காப்புறுதி ஆகியவற்றைப் பெறுகின்றனர். ஆயினும் அதே வேலையிடத்தில் இருக்கும்வரைதான் ஒருவருக்கு வேலையிடத்தில் மருத்துவச் சலுகைகள் தரப்படுகின்றன.
நடுத்தர வயதை எட்டிய பணியாளர்கள் வேறு வேலைக்கு மாறும்போது புதிய வேலையில் காப்புறுதி பயன்களைப் பெறுவது கடினமாகிறது.
தற்போதைய சூழலில் தொழில்துறையில் மாற்றங்கள் ஏராளம். நிறுவனங்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் ஊகிக்கமுடியாத நிலையில், பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து பெறக்கூடிய ஒரு வாழ்க்கைத் தொழிலை நம்பியிருப்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை.
குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் தனித்தனியாக காப்புறுதிக்கான தகுதி மதிப்பீடு செய்யப்படும்போது நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டோருக்குக் காப்புறுதி மறுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகக் காப்புறுதி முகவர் குமரன் மணி தெரிவித்தார்.
“ஒருசில நிறுவனங்களுக்குக் குழு காப்புறுதி இல்லை. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான தனிப்பட்ட காப்புறுதித் திட்டங்களை வாங்கும்படி இத்தகைய வேலையிடங்கள் அவற்றின் ஊழியர்களுக்கு ஆலோசனை கூறுகின்றன,” என்றார் அவர்.
“கடுமையான மருத்துவ பாதிப்பு உள்ள ஊழியர்கள், தங்களது முன்னாள் வேலை இட மருத்துவக் காப்புறுதி பலன்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதி தந்தால் பேருதவியாக இருக்கும்,” என்று அவர் சொன்னார்.
இத்தகைய மாற்றத்தை வேலையிடங்கள் ஆதரிக்குமா என்பது கேள்விக்குறியே என்றார் நிதிச்சேவை இயக்குநர் எம்.பி. செல்வம்.
ஒரு வேலையிடத்தில் பெறப்படும் காப்புறுதி ஆதாயங்களை அப்படியே அடுத்த வேலையிடத்திற்கு மாற்ற முடியுமா என்பது குறித்த விவாதம் காப்புறுதித் துறையில் நடைபெற்று வந்தாலும் இதுகுறித்த ஒரு முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்று அவர் கூறினார்.
சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை ஊழியர் பாதுகாப்பின் மற்றோர் அம்சமாகும். சுயதொழில் செய்வோரால் இலவச மருத்துவ விடுப்பு எடுக்க முடியாது. அவர்கள் வேலைக்குச் செல்லாத நாள்களிலும் வாடகை கட்டவேண்டும்.
நியூட்டன் உணவு நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னதாக ‘மீ கோரெங்’ கடையைத் திறந்தார் ரங்கையா, 39. அவர் அந்தக் கடையைத் தனியாக நடத்துகிறார்.
உடல்நலம் சரியில்லாத நாள்களில் கடையை அவர் மூட வேண்டிவரும். “ஆனால் வாடகை, எரிவாயுக் கட்டணம், மின்சாரக் கட்டணம் போன்ற செலவுகளைத் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
“கடையைப் புதிதாக ஆரம்பித்துள்ள நிலையில் நான் நோய்வாய்ப்பட்டால் விளைவு மோசமாக இருக்கும்,” என்றார் இரண்டு இளம் பிள்ளைகளுக்குத் தந்தையான ரங்கையா.