தமிழ் முரசின் 88வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம், பத்திரிகை அலுவலகத்தில் குதூகலமாகக் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று நடந்தேறியது.
எஸ்பிஎச் மீடியா கட்டடத்தின் ஏழாவது மாடிக்கு ஒரு மாதத்திற்கு முன் அலுவலகம் மாறிய தமிழ் முரசு, புதிய தோற்றத்துடன் திறக்கப்பட்டதில் தமிழ் முரசு ஆசிரியர்கள், துணையாசிரியர்கள், செய்தியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் தலைவர் கோ பூன் வான், ஆங்கில, தமிழ், மலாய் பிரிவுக்கான முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங் முதலிய நிறுவன நிர்வாகிகளும் கொண்டாட்டத்தில் இணைந்தனர். கேக் வெட்டுதலுடன் உணவும் பரிமாறப்பட்டது.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன், தமிழ் முரசு தனியார் பத்திரிகையாக இயங்கி வந்தபோது கடும் நிதிச்சிரமத்தை எதிர்நோக்கிய நிலையில் செய்தி இணை ஆசிரியர் க. கனகலதா, துணை ஆசிரியர்கள் அ. சிவகுணாளன், தேன்மொழி ஆகியோர் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்திற்குச் சம்பளம் இல்லாமல் வேலை செய்ததை, தம் உரையில் நினைவுகூர்ந்தார் தமிழ் முரசின் ஆசிரியர் ராஜேந்திரன் ஜவ்ஹரிலால்.
தற்போதை வளர்ச்சி நிலையை எட்டுவதற்கு முன் தமிழ் முரசு எதிர்நோக்கிய சிரமத்தைப் பற்றி கேட்டு வியந்த திரு கோ, இப்போதுள்ள சூழலும் அபாயங்கள் நிறைந்தது என்றார். உலகெங்கும் நூற்றுக்கணக்கான பத்திரிகை நிறுவனங்கள் மூடி வருவதைச் சுட்டிய திரு கோ, நம்பகமான, தரமான படைப்புகளை உருவாக்குவோருக்குத் தற்போதுள்ள காலம் சவாலானது என்றார்.
கிட்டத்தட்ட 20, 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மின்னிலக்க எழுச்சி, சுனாமியைப் போலப் பெருகி வருவதாகப் பல்வேறு அமைச்சுகளில் பொறுப்பாற்றிய திரு கோ கூறினார். தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் வளரும் நிலையில் வர்த்தக நோக்கம் உள்ள சிலர், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் உள்ளிட்டோரின் வயிற்றைக் அடிக்கத் தயங்கமாட்டார்கள் என்றார்.
2021ஆம் ஆண்டுகளுக்கு முன் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றபோது அந்நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தப்போகும் பணி தம் வாழ்நாளின் ஆகக் கடினமான பணியாக இருக்கப்போவதாகத் திரு கோ நினைத்திருந்தார்.
சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பெருஞ்செல்வந்தர்கள், தங்கள் கெளரவத்திற்காக பத்திரிகைகள் வாங்கினர்.
“ஆனால் இப்போது பத்திரிகை நிறுவனங்களை பில்லியன் வெள்ளி வைத்திருப்போர் வாங்கும்போது, மில்லியன் உள்ளவர்களாக மாறுகின்றனர்,” என்று திரு கோ கூறினார்.
“உங்களை நாங்கள் ஆதரிப்போம். ஆனால் நீங்கள் தொடர்ந்து சரக்குகளைக் கொண்டு வந்து சேர்க்கவேண்டும்,” என்று அறைகூவல் விடுத்தார் திரு கோ.