டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் ஃபெடரர்; கண்ணீருடன் பிரியாவிடை

டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் ஃபெடரர்; கண்ணீருடன் பிரியாவிடை

4 mins read

ஒவ்வொரு விளையாட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் தங்கள் திறமைகளால் முழு ஆதிக்கம் செலுத்தி அந்த விளையாட்டில் நீங்கா இடம் பிடிப்பார்கள்.

காற்பந்து, குறிப்பாக உள்ளூர் காற்பந்து மோகம் என்னை ஆட்கொண்டதற்கு இளம் வயதில் நான் பார்த்த வி. சுந்தரமூர்த்தியின் மந்திரக்கால்கள்தான் காரணம். அப்பப்பா காற்பந்து அவர் கால்களில் ஒட்டிக்கொள்ளும்! வளைந்து நெளிந்து பந்துடன் எதிர்த்தரப்பினரை லாவகமாக அவர் கடந்து செல்லும் காட்சி இன்னும் கண் முன் நிழலாடுகிறது.

அமெரிக்காவின் என்பிஏ எனும் கூடைப்பந்து லீக் போட்டிகளை விடாமல் என்னைப் பார்க்க வைத்த பெருமை மைக்கல் ஜோர்டனைச் சேரும்.

விரைவுக்கார் பந்தயம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த என்னை அந்த கார்களின் பெரும் சப்தத்தை நோக்கி என் காதுகளையும் கால்களையும் பார்வையையும் திருப்பியது பெரும் ஜெர்மானிய வீரர் மைக்கல் ‌ஷூமாக்கர்.

ஒலிம்பிக் நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் செய்த சாதனைகளால் தொடர்ந்து அனைத்துலக நீச்சல் போட்டிகளை நான் தொலைக்காட்சியில் கண்டு களித்தேன்.

ஓட்டப்பந்தயத்தில் உசேன் போல்ட், கோல்ஃப் விளையாட்டுக்கு டைகர் உட்ஸ், ரக்பி விளையாட்டுக்கு ஜோனா லோமு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்கள், விளையாட்டைப் பற்றி தெரியாதவர்களைக் கூட இந்த தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் அசாத்திய திறமைகளால் ரசிகர்களை ஈர்க்கூடியவர்கள்.

அதே போல டென்னிஸ் என்றால் என்னடா இருவர் மாறி மாறி பந்தை அடித்துக்கொள்வதற்கு ஏன் இவ்வளவு பரபரப்பு என்று எண்ணிக்கொண்டிருந்த என்னை விம்பல்டன் மட்டுமல்லாது அனைத்து டென்னிஸ் போட்டிகளையும் வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தவர் ரோஜர் ஃபெடரர்.

-

2003ஆம் ஆண்டு 21 வயதில் அவர் தமது முதல் விம்பள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். ஆனால் அதற்கு முன்னதாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் தொழில்ரீதியான டென்னிஸ் விளையாட்டில் கால் பதித்துவிட்டார். 2001ல் விம்பல்டன் மற்றும் பிரஞ்சு பொது விருது டென்னிஸ் போட்டிகளின் கால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றபோதே அவரது ஆற்றல் குறித்து பல ரசிகர்கள் அறிய வாய்ப்பளித்தது.

-

எனினும் 2003க்குப் பிறகு ஃபெடரரின் டென்னிஸ் பயணத்தில் வெற்றி மழைதான். 41 வயதில் 20 பொது விருது பட்டங்கள், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அவர் 310 வாரங்கள் தொடர்ந்து உலகத் தர வரிசையில் முதல் இடம் பிடித்தவர் ஃபெடரர்.

விளையாட்டுக்காக விளையாட்டுகளைப் பார்த்து ரசித்த எனக்கு 2008ஆம் ஆண்டில் தமிழ் முரசில் சேர்ந்த போது தொழிலுக்காக டென்னிஸ் போட்டிகளைப் பார்த்து அதைப் பற்றி எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போதெல்லாம் டென்னிஸ் உலகின் மிகப் பெரிய வீரராக மாறிவிட்டார் ரோஜர் ஃபெடரர்.

டென்னிஸ் உலகின் மற்றொரு ஜாம்பவான் ஸ்பானியரான ரஃபாயல் நடால். ஃபெடரர் புல்தரை தட மன்னர் என்றால், நடால் களிமண் தட மன்னர்.

-

சுவிஸ் நாட்டவரான ஃபெடரருக்கும் நடாலுக்கும் இருந்த போட்டி உலகப் புகழ் பெற்றது. காற்பந்தில் தற்போது எப்படி கிறிஸ்டியானோ ரொனால்டொ பெரியவரா, லயனல் மெஸ்ஸி பெரியவரா எனும் கேள்விக்கு பதில் காண முடியாதோ அதே போல ஃபெடரரும் நடாலும் டென்னிஸ் உலகை தங்கள் வசம் வைத்திருந்தனர்.

ஃபெடரரைவிட நான்கு வயது இளையவரான நடால் இதுவரை 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். பிறகு டென்னிஸ்ஸுக்கு வந்த ஜோக்கோவிச் 21 பட்டங்கள் வென்றுள்ளார்.

ஆனாலும் தனது கவர்ச்சியான ஆட்டத்தாலும், தன்னடக்கம் நிறைந்த குணத்தாலும் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் ரோஜர் ஃபெடரர்.

தமது 41 வயதில் அனைத்துலக டென்னிஸ் விளையாட்டுக்குப் பிரியாவிடை கொடுத்தார் ஃபெடரர்.

லண்டனில் நேற்று(செப்டம்பர் 23) இரவு நடந்த லேவர் கிண்ண ஆட்டத்துடன் தாம் அனைத்துலக டென்னிஸ் போட்டியிலிருந்து விடைபெற்றுக்கொள்ளப்போவதாக ஃபெடரர் முன்னதாகவே அறிவித்திருந்தார்.

ஐரோப்பிய அணி சார்பாக ஃபெடரரும் நடாலும் களம் இறங்க உலக அணி சார்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் சாக்- பிரான்ஸஸ் டியோபோ இணை நேற்றிரவு( இங்கிலாந்து நேரப்படி) களம் இறங்கியது.

-

ஆடவர் இரட்டையர் போட்டியாக நடந்த இந்த ஆட்டத்தில் ஆரம்ப செட்டை நடால் இணை 6-4 என்ற கணக்கில் தங்கள் வசப்படுத்தினர். ஆனால் அடுத்த செட்டை கவனமுடன் விளையாடிய அமெரிக்க இணை 7-6 என்ற கணக்கில் தங்கள் வசப்படுத்தியது. இதனால் இறுதி செட்டில் விறுவிறுப்பு கூடிய நிலையில் ஆட்டம் வெகு நேரம் நீடித்தது. இறுதியில் 9-11 என்ற கணக்கில் ஃபெடரர்- நடால் இணை போராடி தோல்வி அடைந்தது.

ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் தமது ஓய்வு குறித்து அறிவிப்பு செய்கையில் கண்ணீருடன் விடைபெற்றார் ஃபெடரர். ஜோக்கோவொட் உள்பட பல டென்னிஸ் வீரர்கள் ஃபெடரரைத் தங்கள் தோள்களில் ஏந்தி ஆர்ப்பரித்தனர். அவருடன் சேர்ந்து அவரது பரம வைரியும் நண்பருமான நடாலும் கதறி அழுத காட்சி ஒன்றை உணர்த்தியது.

-

விளையாட்டு என்பது மனித உடல் எல்லைகளை மேலும் மேலும் உச்சத்துக்குத் தள்ளக்கூடிய ஒன்று என்றாலும் அது உணர்வுகளை, மனி உறவுகளை மேம்படுத்தி, நாடுகள், சமயங்கள், வயது, இனங்களைக் கடந்து பலவகை மனிதர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தளம் என்று.

குறிப்பாக தற்போதைய நிலையற்ற சூழலில் இந்த ஒன்றிணைக்கும் தளம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.

ஃபெடரர் என வரும்போது இனி வரும் காலம் எல்லாம் இதுபோல் ஒரு வீரரைக் காண்பது அரிது.

டென்னிஸ் உலகையும் ரசிகர்களையும் ஒன்றிணைத்து கடந்த 24 ஆண்டுகளாக மகிழ்வித்த விளையாட்டு வீரனுக்கு நன்றிகள்.