ரியோ டி ஜெனிரோ: விளையாட்டாளராகவும் பயிற்றுவிப்பாளராகவும் பிரேசிலுக்கு நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்றுதந்த காற்பந்து சகாப்தம் மரியோ ஸகாலோ காலமானார். அவருக்கு வயது 92.
ஸகாலோவின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் கணக்கில் இடம்பெற்ற பதிவில் இந்த விவரம் தெரிய வந்தது.
1958ஆம் ஆண்டில் பிரேசில் முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது. 1962ல் நடைபெற்ற அடுத்த உலகக் கிண்ணப் போட்டியிலும் வாகை சூடியது பிரேசில்.
அவ்விரு போட்டிகளிலும் ஸகாலோ அணியின் முக்கிய விளையாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
1970ஆம் ஆண்டுப் போட்டியிலும் பிரேசில் கிண்ணத்தை வென்றது. பெலே, ஜெயர்ஸின்யோ, ரிவெலினோ, டொஸ்டாவ் போன்ற மாபெரும் நட்சத்திரங்களைக் கொண்ட அந்த அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தார் ஸகாலோ.
விளையாட்டாளர், பயிற்றுவிப்பாளர் ஆகிய இரு அவதாரங்களிலும் உலகக் கிண்ணத்தை வென்ற முதல் நபர் என்ற பெருமை ஸகாலோவைச் சேர்ந்தது.
அதற்குப் பிறகு 1994ஆம் ஆண்டு பிரேசில் மீண்டும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. அப்போது பிரேசில் அணியின் துணைப் பயிற்றுவிப்பாளராக இருந்தார் ஸகாலோ.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் 1998ஆம் ஆண்டுப் போட்டியில் மறுபடியும் பிரேசில் பயிற்றுவிப்பாளராக ஸகாலோ பொறுப்பு வகித்தார். அப்போட்டியின் இறுதியாட்டத்தில் பிரேசில், பிரான்சிடம் தோல்வியடைந்தது.