இந்தூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 109 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் ராகுல், ஷமிக்குப் பதிலாக ஷுப்மன் கில், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர். அதுபோல், ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், வார்னருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், கேமரன் கிரீன் இடம்பெற்றனர்.
கம்மின்ஸ் இல்லாத நிலையில் ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவர் பொறுப்பை ஏற்றார்.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணி முதலில் பந்தடித்தது. அணித்தலைவர் ரோகித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்.
ஆளுக்கு மூன்று பவுண்டரிகளை அடித்தபோதும் அவர்கள் நிலைக்கவில்லை.ரோகித் 12 ஓட்டங்களிலும் கில் 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
புஜாரா (1), ஜடேஜா (4), ஷ்ரேயாஸ் (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, இந்தியாவின் நிலை பரிதாபகரமாக இருந்தது.
சற்று தாக்குப்பிடித்த கோஹ்லி 22 ஓட்டங்களிலும் ஸ்ரீகர் பரத் 17 ஓட்டங்களையும் எடுத்தனர்.
உணவு இடைவேளையின்போது ஏழு விக்கெட் இழப்பிற்கு 84 ஓட்டங்களை எடுத்திருந்த இந்தியா, அதன்பின் மேலும் 25 ஓட்டங்களைச் சேர்த்து, எஞ்சிய மூன்று விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
மேத்யூ கூனமென் ஐந்து விக்கெட்டுகளையும் நேதன் லயன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அடுத்ததாக, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. உஸ்மான் கவாஜாவும் டிராவிஸ் ஹெட்டும் தொடக்க வீரர்களாகக் களம்கண்டனர்.