ராஞ்சி: இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களை எடுத்திருந்த இங்கிலாந்து அணி, இரண்டாம் நாளான சனிக்கிழமை (பிப்ரவரி 25) 353 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 122 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணித் தரப்பில் ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி தொடக்கத்திலேயே சரிவைச் சந்தித்தது. அணித்தலைவர் ரோகித் சர்மா இரண்டு ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இரண்டாம் விக்கெட்டுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஷுப்மன் கில்லும் சற்று தாக்குப்பிடித்தனர். ஆயினும், அணியின் எண்ணிக்கை 86ஆக இருந்தபோது, 38 ஓட்டங்களுடன் கில் நடையைக் கட்டினார்.
அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலும் 73 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களை எடுத்திருந்தது. துருவ் ஜுரெல் 30 ஓட்டங்களுடனும் குல்தீப் யாதவ் 17 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் இன்னிங்சில் நூறு ஓட்டங்களுக்குமேல் பின்தங்கினால் இந்திய அணி மீள்வது சிரமமாகிவிடலாம்.