ராஞ்சி: தனது முதல் அனைத்துலகப் போட்டியிலேயே அருமையான செயல்பாட்டை வெளிப்படுத்தி வியக்க வைத்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) தொடங்கியது.
பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்தடித்தது. தொடக்கத்தில் அதிரடி காட்டியபோதும், உணவு இடைவேளைக்குள் அவ்வணி ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
பென் டக்கெட், ஆலி போப், ஸாக் கிராலி என மூவரை வெளியேற்றினார் ஆகாஷ் தீப்.
பின்னர் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் - பென் ஃபோக்ஸ் இணை 113 ஓட்டங்களைச் சேர்க்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.
முதல்நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஜோ ரூட் 106 ஓட்டங்களுடனும் ஆலி ராபின்சன் 31 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.