லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகியாக ரூபன் அமோரிம் அண்மையில் பதவி ஏற்றார்.
அவர் தலைமையின்கீழ் டிசம்பர் 1ஆம் தேதியன்று, யுனைடெட் தனது சொந்த விளையாட்டரங்கான ஓல்டு டிராஃபர்ட்பில் முதல்முறையாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டம் ஒன்றில் களமிறங்க இருக்கிறது.
இந்த ஆட்டத்தில் யுனைடெட்டும் எவர்ட்டனும் மோதுகின்றன.
ஆட்டத்துக்குத் தயாராக யுனைடெட்டுக்கு மிகக் குறுகிய நேரமே உள்ளது.
இருப்பினும், எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் யுனைடெட் சாக்கு போக்கு சொல்ல முடியாது என்றார் அமோரிம்.
அந்த ஆட்டத்தில் யுனைடெட் வெற்றி பெற்றாக வேண்டும் என்றார் அவர்.
எவர்ட்டன், கடந்த வாரம் பிரன்ட்ஃபர்ட் குழுவுடன் மோதியது.
அந்த ஆட்டம் கோல் ஏதும் இன்றி சமநிலையில் முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதன் பிறகு, கடந்த ஒரு வாரமாக யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்துக்காக எவர்ட்டன் ஆட்டக்காரர்கள் பயிற்சி செய்து தயாராகி வருகின்றனர்.
ஆனால், யுனைடெட்டின் நிலை வேறு.
அக்குழு சில நாள்களுக்கு முன்பு ஐரோப்பா லீக் போட்டியில் போடோ/கிலிம்ட் குழுவுடன் மோதி 3-2 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஐந்து நாள்களில் தனது இரண்டாவது ஆட்டத்தில் யுனைடெட் களமிறங்குகிறது.
“போதுமான ஓய்வு இல்லை. ஆட்டத்துக்குத் தயார் செய்ய மிகக் குறுகிய நேரமே உள்ளது என்ற சாக்கு போக்கு சொல்லக்கூடாது. மாற்று ஆட்டக்காரர்களைப் பயன்படுத்துவோம். நிலைமையைச் சமாளிப்போம். எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தை வென்றே ஆக வேண்டும்,” என்று அமோரிம் தெரிவித்தார்.
யுனைடெட்டின் நிர்வாகியாக அமோரிம் பொறுப்பேற்றதை அடுத்து, இப்ஸ்விப் டவுனுடன் யுனைடெட் மோதியது.
இரு அணிகளும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.