கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 18) இறுதி ஆட்டத்திற்கான களம் தயாராக உள்ளது. 2018 உலகக் கிண்ண வெற்றியாளரான பிரான்ஸ், அர்ஜென்டினாவுக்கு எதிராக கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ள போராடும்.
இரு அணிகளும் அரையிறுதிச் சுற்றில் தாராள வெற்றி கண்டன. மொரோக்கோவை 2-0 எனும் கோல் கணக்கில் பிரான்ஸ் தோற்கடித்தது. குரோவேஷியாவை 3-0 எனும் கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி கண்டது.
லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, தொடக்க ஆட்டத்தில் சவூதி அரேபியாவிடம் 2-1 எனும் கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆனால், ஆட்டங்கள் செல்ல செல்ல, அர்ஜென்டினா அணி மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டு வந்துள்ளது.
மற்றொரு பக்கம், முதல் சுற்றிலும் ‘நாக்-அவுட்’ சுற்றிலும் பிரான்ஸ் சீறிப் பாய்ந்தது. அறுபது ஆண்டுகளில் கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முதல் அணி என்ற பெருமையைப் பெற பிரான்ஸ் உந்துதலுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிஎன்ஏ பேசிய முன்னாள் இந்நாள் சிங்கப்பூர் காற்பந்து ஆட்டக்காரர்களும் பயிற்றுவிப்பாளர்களும், அர்ஜென்டினா பிரான்சை தோற்கடிக்கும் என எதிர்பார்க்கின்றனர். அதற்கெல்லாம் காரணம் ஒரேயொருவர் - மெஸ்ஸி.
முன்பு எஸ்-லீக்கில் விளையாடிய ரோஷன் ராய், “இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வாகை சூடுவதைப் பார்க்க நான் விரும்புகிறேன். ஏனெனில், உலகக் கிண்ணத்தை மெஸ்ஸி தூக்க வேண்டும். மிகச் சிறந்த காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான அவர், அனைத்துலக ஆட்டத்தை நிறைவுசெய்யும் ஓர் அற்புதமான வழியாக இது அமையும்,” என்று சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டமே உலகக் கிண்ணப் போட்டியில் தமது கடைசி ஆட்டம் என்று கடந்த புதன்கிழமை மெஸ்ஸி, 35, உறுதிப்படுத்தினார்.
சிங்கப்பூர் காற்பந்து அணித் தலைவர் ஹாரிஸ் ஹரூணை பொறுத்தவரை, கிண்ணத்தை ஏந்தக்கூடிய சாத்தியம் அர்ஜென்டினாவுக்கு சற்று அதிகம் என்கிறார்.
“மெஸ்ஸிக்காக அவருடைய குழுவினர் தங்களால் ஆன அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பர்,” என்றார் அவர்.