லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து விருதை வெல்லும் போட்டியில் ஆர்சனல் குழு மீண்டும் களமிறங்கியிருப்பதாக அதன் நிர்வாகி மிக்கெல் அர்ட்டேட்டா எடுத்துரைத்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (ஜனவரி 15) இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தங்களின் பரம வைரியான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது ஆர்சனல். கடந்த சில வாரங்களாகத் தடுமாறிய ஆர்சனல் இந்த ஆட்டத்தில் நன்கு மீண்டு வந்திருக்கும் அறிகுறிகளை வெளிப்படுத்தியது.
ஆட்டத்தில் ஸ்பர்ஸ் அணித்தலைவர் சோன் ஹியோங் மின் முதலில் கோல் போட்டார். அதன் பிறகு மீண்டு வந்து ஆர்சனல் வெற்றிபெற்றது.
ஸ்பர்சின் டோமினிக் சோலங்கி சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் கோல் எண்ணிக்கை சமமானது. பின்னர் லியாண்ட்ரோ டிரொசார்ட் ஆர்சனலின் வெற்றி கோலைப் போட்டார்.
இந்த வெற்றி, எல்லா போட்டிகளிலும் கடந்த நான்கு ஆட்டங்களில் ஆர்சனலின் முதல் வெற்றியாகும். லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆர்சனலுக்கும் முதலிடத்தை வகிக்கும் லிவர்பூலுக்கும் இடையே நான்கு புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தனது குழு மீண்டும் லீக் லிருதை வெல்வதற்கான போட்டியில் இறங்கிவிட்டதா என்று அர்ட்டேட்டாவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ஆம். இன்னும் நிறைய விளையாட வேண்டியிருக்கிறது. எல்லா குழுக்களும் எவ்வளவு சவால்களை எதிர்நோக்குகின்றன என்பதைப் பார்க்க முடிகிறது,” என்றார்.