பர்மிங்ஹம்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஆர்சனல்.
சென்ற பருவத்தில் லீக் விருதை நூலிழையில் தவறவிட்ட ஆர்சனல், இம்முறை அதை வெல்லும் இலக்கைக் கொண்டுள்ளது. அக்குழு 20 ஆண்டுகளாக லீக் விருதை வெல்லவில்லை.
புதிய பருவத்தில் தனது முதல் இரு ஆட்டங்களிலும் வென்றுள்ளது ஆர்சனல். வில்லாவுக்கு எதிரான ஆட்டத்தில் லியாண்ட்ரோ ட்ரொசார்ட், தாமஸ் பார்டடே ஆகியோர் ஆர்சனலின் கோல்களைப் போட்டனர்.
சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்ற மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் லீக்கின் நடப்பு வெற்றியாளர்கள் மான்செஸ்டர் சிட்டி, இப்சுவிச் டவுனை 4-1 எனும் கோல் கணக்கில் நசுக்கியது. சிட்டியின் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட், அந்த ஆட்டத்தில் மூன்று கோல்களைப் போட்டு அசத்தினார்.
டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர், 4-0 எனும் கோல் கணக்கில் எவர்ட்டனை ஊதித் தள்ளி இழந்த தன்னம்பிக்கையை மீட்டுக்கொண்டது. அந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்டார் ஸ்பர்ஸ் அணித்தலைவர் சொன் ஹியோங் மின்.
புதிய லீக் பருவத்தில் லெஸ்டர் சிட்டிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 1-1 என சமநிலை கண்டது ஸ்பர்ஸ்.
சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-1 எனும் கோல் கணக்கில் வென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது பிரைட்டன்.