கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் ‘சூப்பர் 4’ சுற்றுப் போட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் தொடர்பில் ஆசிய கிரிக்கெட் மன்றமும் இலங்கை கிரிக்கெட் வாரியமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவரைச் சுட்டி, அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“இதுகுறித்து இன்னும் ஓரிரு நாள்களில் முடிவெடுக்கப்படும்,” என்று பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறினார்.
பல்லகெலே மற்றும் அம்பாந்தோட்டை அரங்குகளுக்கு அப்போட்டிகள் மாற்றப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
கொழும்பில் கடந்த வாரம் இடைவிடாமல் மழை பெய்த நிலையில், அங்கு நடக்கவிருக்கும் ‘சூப்பர் 4’ சுற்றுப் போட்டிகள் பாதிக்கப்படலாம் எனக் கவலை எழுந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை பல்லகெலேவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டமும், இந்திய அணி பந்தடித்து முடித்த நிலையில் கைவிடப்பட்டது.
இதனிடையே, அடுத்த வாரமும் கொழும்பில் இடியுடன் மழை பெய்யலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அட்டவணையின்படி, ‘சூப்பர் 4’ சுற்றின் ஐந்து போட்டிகளையும் 17ஆம் தேதியன்று இறுதிப் போட்டியையும் கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.