மெல்போர்ன்: கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி பிப்ரவரி 1ஆம் தேதி சிங்கப்பூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசும் நான்காம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும் மோதுகிறார்கள்.
ஆறு கிராண்ட் சிலாம் விருதுகளை வென்ற அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய பொது விருதை வெல்வாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 22 வயதான அவர், தற்போதுதான் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். கடந்த ஆண்டு அல்காரஸ் பிரெஞ்சு பொது விருது, அமெரிக்க பொது விருது ஆகியவற்றை வென்று இருந்தார். அவர் 8வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார்.
38 வயதான ஜோகோவிச் 25வது கிராண்ட் சிலாம் விருதை வெல்லும் வேட்கையில் உள்ளார்.
24 கிராண்ட் சிலாம் விருதுகளை வென்று முதல் இடத்தில் இருக்கும் சாதனையாளரான அவர், கடைசியாக 2023ஆம் ஆண்டு அமெரிக்க பொது விருதை வென்ற பிறகு எந்த கிராண்ட்சிலாம் விருதையும் பெறவில்லை.
ஐந்து கிராண்ட் சிலாம் போட்டிக்குப் பிறகு ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர் 38வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். இருவரும் மோதிய போட்டியில் அல்காரஸ் 4லும், ஜோகோவிச் 5லும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

