சென்னை: அண்மையில் நடந்து முடிந்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்ற விளையாட்டு அரங்குகளின் ஆடுகளப் பராமரிப்பாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.
சிறந்த ஆடுகளங்களை வழங்கிய அவர்களை ‘அறியப்படாத நாயகர்கள்’ என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா குறிப்பிட்டார்.
அதன்படி, மும்பை, டெல்லி, சென்னை, கோல்கத்தா, சண்டிகர், ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய வழக்கமான பத்துத் திடல்களின் ஆடுகளப் பராமரிப்பாளர்களுக்குத் தலா ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இம்முறை கௌகாத்தி, விசாகப்பட்டினம், தர்மசாலா என மேலும் மூன்று அரங்குகளில் போட்டிகள் இடம்பெற்ற நிலையில், அவற்றின் ஆடுகளப் பராமரிப்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
2024 ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. ஒரே இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுக்கப்பட்ட சாதனை இருமுறை முறியடிக்கப்பட்டது. எட்டு முறை 250 ஓட்டங்களுக்குமேல் எடுக்கப்பட்டது. இம்முறை மொத்தம் 1,260 சிக்சர்கள் அடிக்கப்பட்டன.
இறுதிப் போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எளிதாக வென்று, கிண்ணத்தைக் கைப்பற்றியது.