லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் இந்தியா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது பஷீருக்கு இன்னும் இந்திய விசா அனுமதி கிடைக்கவில்லை.
இதையடுத்து, இங்கிலாந்து அணியின் பயிற்சி முகாம் இடம்பெற்ற அபுதாபியிலிருந்து அவர் மீண்டும் இங்கிலாந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
“இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் தொடரிலேயே பஷீருக்கு இத்தகைய அனுபவம் கிட்டியிருக்கக்கூடாது. இளம் வீரரான அவருக்கு இப்படி ஏற்பட்டிருப்பதால் நான் மனமுடைந்து போயுள்ளேன்,” என்று தமது மனக்குறையை வெளிப்படுத்தினார் ஸ்டோக்ஸ்.
இந்நிலையில், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் பஷீருக்கு விரைவில் விசா அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.