அகமதாபாத்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாகக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
18 ஆண்டுகளாக ஐபிஎல் கிண்ணத்தை வெல்லத் துடித்த பெங்களூரு அணியின் கனவு தற்போது நனவாகியுள்ளது.
இறுதியாட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வீழ்த்தியது.
கண்கலங்கிய கோஹ்லி: ஐபிஎல் 2008ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது முதல் பெங்களூரு அணியின் முக்கிய அங்கமாக விராத் கோஹ்லி உள்ளார்.
ஜாஷ் ஹேசில்வுட் கடைசி ஓவரை வீசியபோது களத்தில் அப்படியே கண் கலங்கினார் கோஹ்லி.
“இந்த வெற்றி பெங்களூரு அணிக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ரசிகர்களுக்கும் முக்கியம். இதற்காக 18 ஆண்டுகள் காத்திருந்தோம். இந்த அணிக்காக என்னிடம் உள்ள அனைத்தையும் தந்துள்ளேன். கடைசி பந்து வீசியவுடன் மிகவும் உணர்ச்சி வசமானேன்,” என்றார் கோஹ்லி.
“இந்தத் தருணம் எனக்கும் கோஹ்லி மற்றும் இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும் சிறப்பானது. குவாலிபையர்-1 ஆட்டத்தின்போது எங்களால் பட்டம் வெல்ல முடியும் என உறுதியாக நம்பினோம்,” என்றார் பெங்களூரு அணித் தலைவர் ரஜத் பட்டிதார்.
கோஹ்லி உள்ள அணியை வழிநடத்தும் வாய்ப்பு என்பது நல்ல வாய்ப்பாகப் பார்க்கிறேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன், என்றார் பட்டிதார்.
தொடர்புடைய செய்திகள்
பெங்களூரு அணித் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் பருவத்திலேயே கிண்ணத்தை வென்று சாதித்துள்ளார் பட்டிதார்.