மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது முறையாக ஐபிஎல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
செவ்வாய்க்கிழமை சேப்பாக்கத்தில் நடந்த ‘குவாலிஃபையர்-1’ ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இவ்வாட்டத்தில் வெற்றிபெறும் அணி இறுதிச்சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெறும்.
பூவா தலையாவில் வெற்றிபெற்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கம் தர 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழந்து 172 ஓட்டங்கள் எடுத்தது.
ருத்துராஜ் கைக்வாட் 60 ஓட்டங்களும் டேவான் கான்வே 40 ஓட்டங்களும் குவித்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு பந்தடிப்பாளர்கள் சரியாக சோபிக்கவில்லை. 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதன்மூலம் சென்னை அணி மே 28ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
நான்கு முறை ஐபிஎல் கிண்ணத்தை வென்ற சென்னை அணி ஐந்தாவது முறையாகக் கிண்ணத்தை வெல்லக் காத்திருக்கிறது.