சென்னை: ஹங்கேரியில் நடை பெற்ற 45வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தன..
டி.குகேஷ், பிரக்ஞானந்தா (இருவரும் சென்னை) அர்ஜூன் எரிகேசி, விதித் குஜராத்தி, அரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி பொது விருது பிரிவிலும் வைஷாலி (சென்னை), தானியா, ஹரிகா, வந்திகா, திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் பெற்றன.
சதுரங்க ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஆண்கள் அணி 2 முறையும் (2014, 2022) பெண்கள் அணி 1 முறையும் (2022) வெண்கலப் பதக்கம் பெற்றன.
இந்த நிலையில் சதுரங்க ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, விளையாடாத கேப்டன் ஸ்ரீநாத் ஆகியோர் சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி மற்றும் ஸ்ரீநாத் ஆகிய 3 பேரும் ஹங்கேரியில் இருந்து விமானம் மூலம் திங்கட்கிழமை பின்னிரவு 12.20 மணிக்கு சென்னை வந்தனர்.
டி.குகேஷ் செவ்வாய்க்கிழமை காலை 8.25 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொன்னாடை போர்த்தியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்கப்பட்டனர். சதுரங்க விளையாட்டு ஆர்வலர்கள் திரண்டு வந்து ஆரவாரம் செய்து அவர்களை ஊக்குவித்தனர்.