மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் சிட்டி, தான் எதிர்கொண்ட தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய நிலையில் இருந்ததாகக் கூறியுள்ளார் அதன் நிர்வாகி பெப் கார்டியோலா.
ஏழு ஆட்டங்களில் ஆறில் தோல்வியடைந்து ஒன்றில் சமநிலை கண்ட சிட்டி, நொட்டிங்கம் ஃபாரஸ்ட்டுக்கு எதிரான பிரிமியர் லீக் ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வென்று பெருமூச்சு விட்டுக்கொண்டது.
“எங்களுக்கு அது தேவைப்பட்டது. இக்குழு, நமது விளையாட்டாளர்கள் வெற்றிபெற வேண்டியிருந்தது. எனினும், இது ஓராட்டம் மட்டுமே,” என்றார் கார்டியோலா.
சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை (டிசம்பர் 5) அதிகாலை நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் புதிய நிர்வாகி ரூபன் அமோரிம்மின் தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் முதன்முறையாகத் தோல்வியடைந்தது. 2-0 எனும் கோல் கணக்கில் யுனைடெட்டை வென்றது ஆர்சனல்.
நியூகாசல் யுனைடெட்டும் லிவர்பூலும் மோதிய லீக் ஆட்டம் 3-3 என சமநிலையில் முடிந்தது. கடந்த சில ஆட்டங்களில் அபாரமாக விளையாடி வந்த லிவர்பூல் சற்று தடுமாறியது.
செல்சி, சவுத்ஹேம்ப்டனை 5-1 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்து முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்கிறது.

