ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது அவர் தமது வலக்கை மோதிர விரலில் காயமடைந்ததே இதற்குக் காரணம்.
இந்நிலையில், அவருக்குப் பதிலாக உள்ளூர்ப் போட்டிகளில் மேற்கு வங்க மாநிலத்திற்காக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய ‘ஏ’ அணியின் தலைவராக ஈஸ்வரன் இருந்து வருகிறார்.
இவருடைய தந்தையார் ஒரு தமிழர்; தாயார் பஞ்சாபி இனத்தைச் சேர்ந்தவர்.
வரும் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை செஞ்சுரியனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி கேப்டவுனில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும்.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் ரோகித் சர்மாவும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.