லண்டன்: 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் நேரடியாகத் தகுதிபெற்றுள்ளது.
இதன்மூலம் இரண்டு முறை 50 ஓவர் உலகக் கிண்ணத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடி உலகக் கிண்ணத் தொடருக்குள் வெஸ்ட் இண்டீஸ் நுழைந்தது. 2023ஆம் ஆண்டு தகுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்ததால் உலகக் கிண்ணத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடவில்லை.
ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, பங்ளாதேஷ் ஆகிய நாடுகளும் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
போட்டியை ஏற்று நடத்தும் தென்னாப்பிரிக்காவும், தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள ஸிம்பாப்வேவும் நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன.
அனைத்துலகக் கிரிக்கெட் சங்கம் (ஐசிசி) விதிமுறைப்படி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பைப் பெறும்.
இம்முறை ஸிம்பாப்வே நேரடியாகத் தகுதிபெற்றதால் தரவரிசையில் 10வது இடத்திலிருந்தும் வெஸ்ட் இண்டீஸ் வாய்ப்பை இழந்தது
கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி, தரவரிசையில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.


