அடிலெய்ட்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் விருது, தற்போது 1-1 என சமநிலை கண்டுள்ளது.
முதல் நாள் (டிசம்பர் 6) ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி 180 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ஓட்டங்கள் எடுத்து 157 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது போலவே இரண்டாவது இன்னிங்சிலும் இந்தியப் பந்தடிப்பாளர்கள் தடுமாறினர்.
இரண்டாம் நாள் (டிசம்பர் 7) ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 128 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து செய்வது அறியாமல் திகைத்து நின்றது.
இந்நிலையில், மூன்றாம் நாள் (டிசம்பர் 8) ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டையைத் தொடங்கினர்.
இறுதியில், இந்திய அணி 175 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 19 ஓட்டங்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது.
எளிதாக இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா நான்காவது ஓவரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் சதமடித்த டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேனில் நடக்கிறது.