அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.
ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை (அக்டோபர் 23) காலை 11.30 மணிக்கு அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடக்கவுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. முன்னணி பந்தடிப்பாளர்கள் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, அணித் தலைவர் ஷுப்மன் கில் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் என்பதால் இரண்டாவது, மூன்றாவது ஆட்டங்களில் இந்திய அணி தனது முழுத் திறமையைக் காட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
கில் முதல்முறையாக இந்திய அணியை ஒருநாள் தொடரில் வழிநடத்துகிறார். அதனால் அவர்மீதும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ், கிரிஸ் கிரீன் உள்ளிட்ட சில முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். இதனால் அணித் தலைவர் மிட்செல் மார்ஷ் நெருக்கடி இல்லாமல் செயல்படுகிறார்.

