கொழும்பு: தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்துவருகிறது.
இதில் முக்கிய ஆட்டமாகப் பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) இலங்கையில் நடக்கவுள்ளது.
பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்குப் பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் திட்டமிட்டபடி நடக்கவுள்ளது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்குச் சவால்விடும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கனத்த மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆட்டம் நடக்கும் நேரத்தில் மழை குறுக்கிடலாம் என்று கூறப்படுகிறது.
ஆட்டம் நடக்கும் மாலை நேரத்தில் கொழும்பு வட்டாரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு 70 விழுக்காடு இருப்பதாக இலங்கையின் வானிலை ஆய்வகம் கூறுகிறது.
ஆட்டம் நடக்கும் பிரேமதாசா விளையாட்டரங்கு சிறப்பான வசதிகளைக் கொண்ட விளையாட்டரங்கு. மழை ஓய்ந்த 20 நிமிடங்களில் ஆட்டத்தை நடத்தும் திறன் கொண்டது அது.
அனல் பறக்கும் ஆட்டம்
உலகக் கிண்ணப் போட்டிகளில் பெரும்பாலான ஆட்டங்களில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியுள்ளது. அதனால் இம்முறையும் இந்தியாவின் ஆதிக்கம் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும் இடையே அனல் பறக்கும் போட்டி இருக்கும் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான இந்தியா, பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் இலங்கை சென்றுவிட்டனர்.
போட்டி அட்டவணைப்படி ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 9.30 மணிக்குத் தொடங்கும்.

