வதோதரா: நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்ட் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வதோதராவில் உள்ள பிசிஏ விளையாட்டரங்கில் சனிக்கிழமை (ஜனவரி 10) பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பன்ட் அடிவயிற்றில் காயமுற்றதே அதற்குக் காரணம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை வதோதராவில் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக கே.எல். ராகுல் செயல்படுகிறார்.
ஒருநாள் போட்டித் தொடர் ஜனவரி 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் இரு அணிகளுக்கும் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கவிருக்கிறது.
அதன்பின் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் டி20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது.

