விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா, விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறார்.
அதனால், முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய இஷான் கிஷனுக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.
ரோகித் இல்லாத நிலையில் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்தினார். அப்போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி தொடக்கத்தில் மளமளவென்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
ஆனாலும், கேஎல் ராகுல் (75*), பாண்டியா (25), ஜடேஜா (45*) ஆகியோர் பொறுப்புடன் ஆட, இந்திய அணி 61 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் ஆட்டத்தை வென்றது.
கடைசி, மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி புதன்கிழமை சென்னையில் நடக்கவிருக்கிறது.