டர்பன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதன் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) டர்பன் நகரில் நடந்தது. பூவா தலையாவில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீசியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா 7 ஒட்டங்களில் வெளியேறினார்.
இருப்பினும் சஞ்சு சாம்சன், சூர்யகுமாருடன் இணைந்து அதிரடியாக ஆடினார்.
அடுத்தடுத்து சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசிய சாம்சன் 27 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 47 பந்துகளில் சதமடித்து மிரட்டினார்.
சாம்சனுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த சூர்யகுமார் 21 ஓட்டங்களும் திலக் வர்மா 33 ஓட்டங்களும் எடுத்தனர்.
சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 202 ஓட்டங்கள் எடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
சவாலான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய தென்னாப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்கள் குவிக்க தடுமாறியது.
இறுதியில் 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்கள் மட்டுமே தென்னாப்பிரிக்கா எடுத்தது. அதிகபட்சமாக கிளாசன் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.
ஆட்டநாயகன் விருதை சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது ஆட்டம்
இந்நிலையில் தொடரின் இரண்டாவது டி20 ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) நடக்கிறது.
சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் இரண்டாவது ஆட்டத்தில் பதிலடி கொடுக்க தென்னாப்பிரிக்கா கடுமையாக போரடக்கூடும்.