ஜோகனஸ்பர்க்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஃபேபியன் ஆலனைத் தாக்கி, துப்பாக்கி முனையில் அவருடைய உடைமைகளைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்தது.
இந்தியாவின் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போன்று, தென்னாப்பிரிக்காவில் தற்போது எஸ்ஏ20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பால் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஆலன்.
இந்நிலையில், ஜோகனஸ்பர்க் நகரில் ராயல்ஸ் குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே ஆலனைத் தாக்கி, கொள்ளையர்கள் அவரது உடைமைகளைப் பறித்துச் சென்றதாக ‘கிரிக்பஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
புகழ்பெற்ற சேண்டன் சன் ஹோட்டலுக்கு வெளியே, துப்பாக்கி வைத்திருந்த கொள்ளையர்கள், ஆலனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது, அவரது கைப்பேசி, கைக்கடிகாரம், கைப்பை உள்ளிட்டவற்றைக் கொள்ளையர்கள் பிடுங்கிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.
இச்சம்பவத்தை ராயல்ஸ் குழு நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஆலன் பாதுகாப்பாக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
28 வயதான ஆலன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 20 ஒருநாள் போட்டிகளிலும் 34 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அத்துடன், ஐபிஎல் போட்டிகளில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பிலும் விளையாடி இருக்கிறார்.