மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையில் ரூ.5.38 கோடிக்கு அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
மும்பை மாநகரின் கிழக்கு பாந்த்ரா பகுதியில் கட்டப்பட்டுவரும் ‘டென் பிகேசி’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் ஒரு வீட்டை வாங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அந்த அடுக்குமாடி வீடுகளை ‘அதானி ரியால்டி’ நிறுவனம் கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
யஷஸ்வியின் பெயரில் அவ்வீடு 2024 ஜனவரி 7ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டது என்றும் அது 1,110 சதுர அடி பரப்பளவு கொண்டது என்றும் ‘மணி கன்ட்ரோல்’ செய்தி தெரிவிக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டுதான் தானே பகுதியில் ஐந்து படுக்கையறைகளுடன் கூடிய, 1,500 சதுர அடி பரப்பளவு கொண்ட, ஆடம்பரமான ஒரு வீட்டிற்கு யஷஸ்வி மாறியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தொடக்கப் பந்தடிப்பாளரான 22 வயது யஷஸ்வி ஓட்டங்களைக் குவித்து வருகிறார். மூன்று போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதங்களுடன் அவர் மொத்தம் 545 ஓட்டங்களை எடுத்துள்ளார்.