கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியின் முன்னாள் தலைவர்களான மகேந்திர சிங் டோனியும் விராத் கோஹ்லியும் உலகப் புகழ்பெற்ற ஆட்டக்காரர்கள்.
அனைத்துலகப் போட்டிகளிலிருந்து 42 வயதான டோனி ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், 34 வயதான கோஹ்லி இன்னும் விளையாடி வருகிறார்.
அதே வேளையில், இருவருமே இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இருவரும் உலக அளவில் பணக்கார விளையாட்டாளர்களாகத் திகழ்கின்றனர்.
அண்மையில் வெளியான ஓர் அறிக்கை, இருவரின் நிகர சொத்து மதிப்பும் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
டோனியின் சொத்து மதிப்பு ரூ.1,040 கோடி (S$170 மில்லியன்) என்கிறது ‘ஸ்டாக் குரோ’ அறிக்கை.
ஆயினும், அவரைக் காட்டிலும் கோஹ்லியின் சொத்து மதிப்பு பத்துக் கோடி ரூபாய் சொத்து அதிகம். அதாவது, கோஹ்லிக்கு ரூ.1,050 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாகக் கூறுகிறது அவ்வறிக்கை.
அவ்வகையில் பார்த்தால், இப்போதைக்கு அனைத்துலக கிரிக்கெட் வீரர்களில் கோஹ்லியே பெரும் பணக்காரர்.
கோஹ்லியை இன்ஸ்டகிராம் வழியாக 252 மில்லியன் (25.2 கோடி) பேர் பின்தொடர்கின்றனர். இந்திய அணியில் ‘ஏ+’ நிலை வீரராக இருக்கும் அவருக்கு ஆண்டிற்கு ரூ.7 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
அத்துடன், அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.
மேலும், ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடுவதன்மூலம் கோஹ்லி ஓராண்டில் ரூ.15 கோடி ஈட்டுகிறார்.
மாறாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவரான டோனிக்கு ஆண்டிற்கு ரூ.12 கோடி கிடைக்கிறது.