சென்னை: நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த அரங்கான சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்தாடியது.
நடப்புத் தொடரின் முதல் சுற்றில் சென்னை அணி சேப்பாக்கம் அரங்கில் விளையாடிய கடைசிப் போட்டி இதுதான்.
இப்போட்டியில் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. ஆயினும், அவ்வணி பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி ஒரு விளையாட்டாளராக இப்பருவத்துடன் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டி முடிந்ததும் திடலில் அவர் வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது அதனை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
அப்போது, போட்டியின் வருணனையாளர்களில் ஒருவரான இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், ஓடோடி வந்து தமது சட்டையில் நினைவொப்பமிடுமாறு (ஆட்டோகிராஃப்) டோனியிடம் கேட்டுக்கொண்டார். டோனியும் அதற்கு இணங்கினார்.
இந்நிகழ்வு உணர்ச்சிபூர்வமானதாகவும் அங்கிருந்த அனைவரும் கண்டு நெகிழ்வதாகவும் அமைந்தது.