புதுடெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீருக்கு விசா வழங்கப்பட்டுவிட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பஷீருக்கு விசா கிடைப்பது தாமதமானதால் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை (ஜனவரி 25) ஹைதராபாத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க முடியாமல் போனது.
இந்நிலையில், விசா கிடைத்துவிட்டதால் இவ்வார இறுதியில் பஷீர் இந்தியா செல்வார் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கும் 2வது போட்டியில் அவர் அறிமுக வீரராகக் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பஷீருக்கு விசா கிடைப்பது தாமதமானது ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார்.
மேலும், பிரிட்டிஷ் குடிமக்களுக்கு விசா வழங்குவதில் இந்தியா நியாயமாக நடந்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கின் பேச்சாளரும் தெரிவித்திருந்தார்.

