லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் செல்சி காற்பந்துக் குழுவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் கடினமான ஆட்டங்களால் அது மனம் துவண்டு விடாது என அதன் நிர்வாகி என்ஸோ மரேஸ்கா கூறியுள்ளார்.
கடந்த வாரம் லிவர்பூலிடம் 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்ற செல்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நியூகாசல் யுனைடெட் உடனான கடினமான ஆட்டம் காத்திருக்கிறது. அதற்கு அடுத்து மான்செஸ்டர் யுனைடெட், ஆர்சனல் என இரு சவால்மிக்க அணிகளும் செல்சியின் உறுதியைச் சோதிக்கவுள்ளன.
இந்தப் பருவம் விளையாடியுள்ள எட்டு ஆட்டங்களில் 14 புள்ளிகளைப் பெற்றுள்ள செல்சி, கடந்த இரு ஆட்டங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை.
கடந்த வாரம் லிவர்பூலின் பிடியில் தோல்வி கண்டாலும், தம் ஆட்டக்காரர்களைப் பாராட்டியுள்ள மரேஸ்கா, இனிவரும் சவால்களையும் சமாளிக்க தாங்கள் தயார் என உறுதியளித்துள்ளார்.
லீக் பட்டியலில் செல்சியைவிட இரு புள்ளிகள் மட்டும் குறைவாகப் பெற்றுள்ள நியூகாசல், ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் வெல்வதன்மூலம் செல்சியை முந்த முடியும்.

