துபாய் அனைத்துலகக் காற்பந்து விருதுகளில் ஆண்டின் சிறந்த காற்பந்து வீரராக மான்செஸ்டர் சிட்டி குழுவிற்காக விளையாடிவரும் நார்வே வீரர் எர்ங் ஹாலண்ட் அறிவிக்கப்பட்டார்.
துபாயில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) விருதுகள் வழங்கும் விழா இடம்பெற்றது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம், சாம்பியன்ஸ் லீக் என்ற மூன்று பட்டங்களை வென்ற மான்செஸ்டர் சிட்டி குழு, ஆண்டின் சிறந்த காற்பந்துக் குழு உட்பட ஆறு விருதுகளை அள்ளியது.
அதன் நிர்வாகி பெப் கார்டியோலா சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதைத் தட்டிச் சென்றார். சிறந்த கோல்காப்பாளராக எடர்சனும் சிறந்த மத்தியத் திடல் ஆட்டக்காரராக ரோட்ரியும் தேர்வுபெற்றனர். கல்தூன் அல் அபாரக் சிறந்த தலைவராக அறிவிக்கப்பட்டார்.
போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மூன்று விருதுகளைக் கைப்பற்றினார். சவூதி அரேபியாவின் அல் நசர் குழுவிற்காக விளையாடிவரும் அவருக்கு மரடோனா விருது, மத்தியக் கிழக்கின் சிறந்த வீரர், ரசிகர்களின் மனங்கவர் வீரர் என மூன்று விருதுகள் வழங்கப்பட்டன.