லிஸ்பன்: காற்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும் மஞ்சள், சிவப்பு அட்டைகள் குறித்து அவ்விளையாட்டு ரசிகர்கள் அனைவருமே அறிந்திருப்பர்.
இந்நிலையில், போர்ச்சுகலில் நடந்த ஒரு காற்பந்து ஆட்டத்தின்போது முதன்முறையாக வெள்ளை அட்டை பயன்படுத்தப்பட்டது.
கடந்த சனிக்கிழமை 21ஆம் தேதி, போர்ச்சுகல் கிண்ணக் காலிறுதி ஆட்டத்தில் பென்ஃபிகா-ஸ்போர்ட்டிங் லிஸ்பன் மகளிர் குழுக்கள் மோதின.
பிற்பாதி ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களே ஆனபோது, ஆட்ட நடுவர் கேத்தரினா கெம்போஸ் வெள்ளை அட்டையை உயர்த்திக் காட்டினார். அதனைக் கண்டதும் பார்வையாளர் பகுதியில் இருந்த ரசிகர்கள் பேராரவாரம் செய்தனர்.
விளையாட்டுத் திடலில் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்வதை மெச்சும் நோக்கில் வெள்ளை அட்டையைப் போர்ச்சுகல் அறிமுகம் செய்துள்ளது.
உண்மையில், அந்த அட்டை விளையாட்டு வீரர்களை நோக்கிக் காட்டப்படவில்லை.
ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது பார்வையாளர் பகுதியிலிருந்த ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிட்டார். அதுபற்றி அறிந்ததும் இரு குழுக்களையும் சேர்ந்த மருத்துவக் குழுவினர் ஓடிச் சென்று, அந்த ரசிகருக்கு சிகிச்சை அளித்தனர்.
அச்செயலை அங்கீகரித்து, பாராட்டும் வகையில், மருத்துவக் குழுவினரை நோக்கி வெள்ளை அட்டையை உயர்த்திக்காட்டினார் நடுவர் கெம்போஸ்.
சாதனை எண்ணிக்கையில் திரண்டிருந்த ரசிகர்களுக்குமுன் நடந்த அந்த ஆட்டத்தில் பென்ஃபிகா குழு 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.