சென்னை: இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி, இன்னும் பத்து நாள்களில் வலைப்பயிற்சியைத் தொடங்கக்கூடும் என்று அவ்வணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே எஸ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
பள்ளி அளவிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான ஒரு நிகழ்வில் பங்கேற்றபோது, டோனியின் உடல்நிலை குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.
“டோனி நல்ல உடல்நிலையுடன் உள்ளார். உடற்பயிற்சிக்கூடத்திற்குச் சென்று வருகிறார். பெரும்பாலும் இன்னும் பத்து நாள்களில் அவர் வலைப்பயிற்சியைத் தொடங்கலாம்,” என்று அவர் சொன்னார்.
அடுத்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, சென்னை அணியின் முதல் பயிற்சி முகாமை மார்ச் முதல் வாரத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் திரு விஸ்வநாதன் கூறினார்.
அண்மைய ஐபிஎல் ஏலத்தின்போது நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரல் மிட்சல் உள்ளிட்ட ஆறு வீரர்களை சென்னை அணி வாங்கியது.