பிரேசில் காற்பந்து நட்சத்திரம் நெய்மாரையும் பிரதிவாதிகள் சிலரையும் மோசடி, ஊழல் வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஸ்பானிய நீதிமன்றம் ஒன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) விடுவித்தது.
2013ல் சாந்தோஸ் குழுவிலிருந்து பார்சிலோனாவுக்கு நெய்மார் மாறியதன் தொடர்பில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
பிரேசிலிய முதலீட்டு நிறுவனமான டிஐஎஸ் இந்த வழக்கைத் தொடுத்திருந்தது.
நெய்மாருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும் பிரதிவாதிகளுக்கு €149 மில்லியன் (S$212.7 மி.) அபராதமும் விதிக்கும்படி டிஐஎஸ் கேட்டுக்கொண்டது.
கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, பார்சிலோனாவில் நெய்மாரின் வழக்கு தொடங்கியது.
இந்த வழக்கில் குற்றம் புரியப்பட்டதற்கான தடயம் சிறிதளவுகூட கிடைக்கவில்லை என்பதால், பிரதிவாதிகள் அனைவரையும் விடுவிக்குமாறு பார்சிலோனா நீதிமன்றத்திடம் அரசாங்க தரப்பு வழக்கறிஞர் லூயி கார்சியா கேண்டோன் அக்டோபர் இறுதியில் கேட்டுக்கொண்டார்.

