புதுடெல்லி: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது தன்மீது இரும்பு ஆணியை ரசிகர் ஒருவர் எறிந்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையே அக்டோபர் 19ஆம் தேதி நடந்த உலகக் கிண்ணப் போட்டியின்போது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிவழியில் வருணனையாளராகச் செயல்பட்ட இர்ஃபான் இந்த அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
“பெஷாவரில் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது, ரசிகர் ஒருவர் எறிந்த இரும்பு ஆணி, என் கண்ணுக்குக் கீழே தாக்கியது,” என்று அவர் சொன்னார்.
“அதுபற்றி நாங்கள் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. அவர்களின் விருந்தோம்பலை எப்போதுமே மெச்சினோம். இந்தியாவில் ரசிகர்களின் நடத்தை குறித்துப் புகார் செய்வதைப் பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார் இர்ஃபான்.
பாகிஸ்தான் செய்தியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் விசா வழங்கப்படாதது, அகமதாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது ரசிகர்கள் நடந்துகொண்டவிதம் உள்ளிட்டவை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அண்மையில் அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திடம் புகார் அளித்திருந்தது.
இவ்வேளையில், பாகிஸ்தானில் தாம் எதிர்கொண்ட அதிர்ச்சி குறித்து இர்ஃபான் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.