புதுடெல்லி: விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த உலக சதுரங்க வெற்றியாளர் டி.குகேஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் உட்பட நால்வருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விளையாட்டுத்துறை வியாழக்கிழமை (ஜனவரி 2) இதனை அறிவித்தது. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கரின் பெயர் இப்பட்டியலில் முதலில் விடுபட்டிருந்தது.
ஜனவரி 17ஆம் தேதி அதிபர் மாளிகையில் நடைபெற இருக்கும் விழாவில், மனு பாக்கர், குகேஷுடன் இணைந்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு அதிபர் திரௌபதி முர்மு இந்த விருதை வழங்குகிறார்.
இதுகுறித்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், உரிய ஆய்வுக்குப் பின்பும் கீழ்க்கண்ட விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்க அரசு முடிவெடுத்துள்ளது,” என்று தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 17ஆம் தேதி கேல் ரத்னா, அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியா விருது பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நான்கு பேர் கேல் ரத்னா விருதும், 32 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதும், மூன்று பயிற்றுவிப்பாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதும் வழங்கப்பட இருக்கின்றன.
“இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு எனக்கும் எனது சாதனைகளை அங்கீகரிக்கவும் மதிப்புமிக்க மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை அறிவித்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
:இந்த விருது 2025ஆம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும்,” என்று குகேஷ் தெரிவித்தார்.
முன்னதாக, கேல் ரத்னா விருது பெறுவோர் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் விடுபட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. “மனு பாக்கர் விண்ணப்பிக்கவில்லை,” என இந்திய விளையாட்டு அமைச்சு விளக்கம் கூறியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே மனுபாக்கரின் தந்தை ராம் கிஷன், “மனு பாக்கரைத் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையாக உருவாக்கியதற்குப் பதிலாக கிரிக்கெட் வீராங்கனையாகக் கொண்டு வந்திருக்க வேண்டும்,” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக மனு பாக்கரும், “நாட்டுக்காக விளையாடி பெருமை சேர்ப்பது மட்டுமே என் வேலை. விருதுகளும், அங்கீகாரமும் சிறப்பாகச் செயல்படுவதற்கான துாண்டுகோலே. ஆனால், விருதுகளைப் பெறுவது மட்டுமே எனது இலக்கல்ல,” என்று தெரிவித்திருந்தார்.

