மும்பை: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ஹார்திக் பாண்டியா பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடியாமல் போகலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னர் மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா, கடந்த இரு பருவங்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவராகச் செயல்பட்டார்.
இந்நிலையில், அண்மையில் அவர் மீண்டும் மும்பை அணிக்கு மாறினார். அத்துடன், ரோகித் சர்மாவிற்குப் பதிலாக மும்பை அணியின் புதிய தலைவராகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.
புனே நகரில் பங்ளாதேஷுக்கு எதிரான உலகக் கிண்ண ஒருநாள் போட்டியின்போது பாண்டியா காயமடைந்தார். அதனால் அவர் உலகக் கிண்ணத் தொடரைவிட்டே வெளியேற நேர்ந்தது.
அக்காயத்திலிருந்து அவர் இன்னும் தேறாததால், அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்பது உறுதியில்லை என்பதால் மும்பை அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.