லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பாந்து லீக்கில் (இபிஎல்) லெஸ்டர் குழு, தொடர்ந்து ஏழு ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள நிலையில், தாம் அக்குழுவின் நிர்வாகி பொறுப்பிலிருந்து நீக்கப்படும் சாத்தியம் குறித்து தமக்குப் பயமில்லை என ரூட் வேன் நிஸ்டல்ரோய் கூறியுள்ளார்.
டிசம்பர் தொடக்கத்தில் லெஸ்டர் நிர்வாகியாக அவர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அக்குழு விளையாடிய முதல் இரு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்று மற்றொன்றில் சமநிலை அடைந்து, நான்கு புள்ளிகளைப் பெற்றிருந்தது.
ஆனால், அந்த நல்ல தொடக்கம் விரைவில் முடிவுக்கு வந்தது. தற்போது இபிஎல் பட்டியலில் இரண்டாவது கடைசி நிலையில் உள்ள லெஸ்டர், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) டோட்டன்ஹம் குழுவுடன் பொருதுகிறது.
மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மட்ரிட் குழுக்களின் முன்னாள் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரரான வேன் நிஸ்டல்ரோய், “இக்கட்டான நிலையிலிருந்து லெஸ்டரை மீட்பதிலேயே என் கவனம் உள்ளது. அது மட்டுமே எனக்கு இப்போதைக்கு உள்ள கவலை,” என்றார்.
நடப்பு பருவம் மேன்யூவின் இடைக்கால நிர்வாகியாகப் பொறுப்பு வகித்த அவர், குழுவை மேம்படுத்துவதற்கான வழிகளை லெஸ்டர் இன்னுமும் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.