சோல்: வட அமெரிக்காவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணப் போட்டியில், மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததால், தென்கொரியாவின் பயணம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. இதனால், அக்குழு ‘ஏ’ பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததுடன், 32 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறிய சிறந்த எட்டு மூன்றாவது இட அணிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை.
2018 ரஷ்யா உலகக் கிண்ணப் போட்டிகளுக்கும் பிறகு, தென்கொரியா குழுச் சுற்றைத் தாண்டத் தவறுவது இதுவே முதல் முறையாகும்.
அதனைத் தொடர்ந்து, தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், பணியாளர் நியமனங்களில் காட்டப்பட்ட பாரபட்சமே நாடு முன்கூட்டியே வெளியேறியதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியதுடன், தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹோங் மியுங்-போவையும் விமர்சித்து, தேசிய அணியின் செயல்திறன் குறித்து விளையாட்டு அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜூன் 28ஆம் தேதி, எக்ஸ் தளத்தில் எழுதிய ஒரு பதிவில், லீ, “இந்த எதிர்பாராத விளைவைக் கண்டு நான் திகைத்துப்போனது மட்டுமல்ல, முற்றிலும் குழம்பிப் போயிருக்கிறேன்.
“மீண்டும் ஒருமுறை, பணியாளர் முடிவுகளே இதற்குக் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. திறமையை விட ‘நாம் அவர்களுக்கு எதிரானவர்கள்’ என்ற நிலைப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, திறமையற்ற ஒருவர் அணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும்போது, அதன் விளைவு பகல் வெளிச்சம் போல் தெளிவாகத் தெரிகிறது.
“இத்தகைய குறைபாடுள்ள நியமனங்கள் சாத்தியமாவதற்குக் காரணம், அவற்றைச் செய்யும் அதிகாரம் உள்ளவர்களைக் கண்காணிப்பதும், உன்னிப்பாக ஆராய்வதும், அவர்களைப் பொறுப்பேற்க வைப்பதும் கடினமாக இருப்பதே,” என்று லீ வாதிட்டார்.
பயிற்றுவிப்பாளரை நீக்கக் கோரிக்கை மனு
2024ல் தேசிய அணி பயிற்றுவிப்பாளராக ஹோங் மீண்டும் நியமிக்கப்பட்டது, நியமனச் செயல்பாட்டில் பாரபட்சம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுகளை தென் கொரிய ஊடகங்கள் முன்னதாக எழுப்பியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டுகளை ஹோங் மறுத்திருந்தார்.
“பொதுமக்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ள குழு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது, அமைப்பு ரீதியான மற்றும் பணியாளர் தோல்விகளின் விளைவாகத் தோன்றுகிறது,” என்று அதிபர் லீ தனது பதிவில் எழுதியிருந்தார்.

