துபாய்: சிறந்த வீரர்கள் அடங்கிய, சென்ற ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் அணியை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) அறிவித்துள்ளது.
இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா, ஐசிசி அணிக்கும் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் உட்பட மொத்தம் ஆறு இந்திய வீரர்கள் அவ்வணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ், முகம்மது ஷமி ஆகியோரே மற்ற ஐவர்.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளைச் சேர்ந்த இருவரும் நியூசிலாந்து வீரர் ஒருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் அடங்கிய ஐசிசி டி20 அணிக்கு இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவ்வணியில் மொத்தம் நான்கு இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஐசிசி சிறந்த ஒருநாள் அணி: ரோகித் சர்மா (அணித்தலைவர்), ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, முகம்மது சிராஜ், முகம்மது ஷமி, குல்தீப் யாதவ் (அறுவரும் இந்தியா), டிராவிஸ் ஹெட், ஆடம் ஸாம்பா (இருவரும் ஆஸ்திரேலியா), ஹென்ரிக் கிளாசன் (விக்கெட் காப்பாளர்), மார்க்கோ யான்சன் (இருவரும் தென்னாப்பிரிக்கா), டேரில் மிட்செல் (நியூசிலாந்து).