விசாகப்பட்டினம்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் ஷுப்மன் கில் சதமடித்தார்.
அனைத்துலக டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் அடித்த மூன்றாவது சதம் இது. 13 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அவர் அடித்த முதல் சதமும் இதுதான். அவர் 104 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோற்றுப்போனது.
இந்நிலையில், இரண்டாவது போட்டி இம்மாதம் 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 396 ஓட்டங்களை எடுத்தது. அவ்வணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ஓட்டங்களைக் குவித்தார்.
அடுத்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 253 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆறு விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்நிலையில், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் முதலிரு விக்கெட்டுகளையும் விரைவில் இழந்தது.
ஒரு கட்டத்தில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்களை எடுத்திருந்த அவ்வணியை ஷுப்மன் - அக்சர் பட்டேல் இணை மீட்டது.
ஆயினும், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 255 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, 399 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் அவ்வணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்களை எடுத்திருந்தது.