இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) மாலை நடைபெறுகிறது.
இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.
இந்நிலையில், இரண்டாவது ஆட்டத்திலும் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை அந்த அணிக்கு வித்தியாசமான கள நிலவரமாக அமையும். ஆட்டம் செல்ல செல்ல, சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக திடல் அமையக்கூடும்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. எனவே, மழை குறுக்கிட்டால் ஆட்ட நேரம் குறைக்கப்படலாம்.
பொதுவாக தோல்வியின் பிடியில் இருக்கும்போதெல்லாம், அடுத்த ஆட்டத்தில் வலுவாக மீண்டெழுவது ஆஸ்திரேலிய அணிக்கு வழக்கம்.
இதன் பொருட்டு, ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் தாக்குதல் வீச்சுக்கு இந்திய அணி ஈடுகொடுத்து விளையாட வேண்டியிருக்கும்.
ஆனால், இந்திய அணிக்கு ஒரு நற்செய்தி. தனிப்பட்ட காரணத்திற்காக முதல் ஆட்டத்தில் இடம்பெறாத இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா, ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் முதல் பந்தடிப்பாளராகக் களமிறங்குகிறார்.