மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியா சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில், முதலிரு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பத்து விக்கெட் வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒன்பதாவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார் அஸ்வின்.
கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் அஸ்வினும் ஜடேஜாவும் சேர்ந்து 60 விக்கெட்டுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
உடற்தகுதி பெறாததால் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது ஷமி அணியில் இடம்பெறவில்லை. அதுபோல் காயத்தில் இருந்து மீளாத பிரசித் கிருஷ்ணாவும் சேர்க்கப்படவில்லை.
அணியில் கே எல் ராகுல், கே எஸ் பரத், துருவ் ஜுரெல் என மூன்று விக்கெட் காப்பாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது ஜுரெல் இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது இதுவே முதன்முறை.
தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இடம்பெறாத இஷான் கிஷன் இன்னும் அணிக்குத் திரும்பவில்லை.
முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (அணித்தலைவர்), ஜஸ்பிரீத் பும்ரா (துணைத் தலைவர்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், கே எஸ் பரத், துருவ் ஜுரெல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.