புதுடெல்லி: காற்பந்து உலகக் கிண்ண வெற்றியாளரான அர்ஜென்டினா அணியின் தலைவர் லயனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 15 வரை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வார்.
அவர், ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்குச் செல்கிறார்.
மெஸ்ஸி கோல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்குச் சென்று, பண்பாட்டு நிகழ்வுகள், பயிலரங்குகள், விளையாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கலந்துகொள்வார்.
மெஸ்ஸியின் பயணம் டிசம்பர் 13ஆம் தேதி கோல்கத்தாவில் தொடங்கும். அங்கு அவர் ‘ஈடன் கார்டன்’ விளையாட்டரங்கிற்குச் செல்வார். மேற்கு வங்க அரசாங்கம் மெஸ்ஸிக்கு பிரம்மாண்ட விருந்தளித்துச் சிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. ஏழு பேர் கொண்ட அணிகள் களமிறங்கும் ‘கோட் கிண்ணம்’ எனும் சிறப்புப் போட்டியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
பொது நிகழ்ச்சிகளைத் தவிர, மெஸ்ஸி குழந்தைகளுக்குக் காற்பந்துப் பயிலரங்கு ஒன்றையும் நடத்துவார். அதோடு, அடித்தளத் திறன்களை வளர்க்கும் நோக்கில் அவர் காற்பந்துப் பயிலரங்கு ஒன்றையும் தொடங்கிவைப்பார்.
அதற்கு மறுநாள், டிசம்பர் 14ஆம் தேதி, மெஸ்ஸி மும்பைக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வான்கடே விளையாட்டரங்கிற்கு அவர் செல்வார்.
மெஸ்ஸி கடைசியாக 2011ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா சென்றார்.